×

வேண்டியதை அள்ளித்தரும் ஆடி வெள்ளியின் சிறப்புகள்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால், குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும்.

ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும்.

துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். வீட்டில் அம்மன் படத்துக்கு சிறப்பு பூஜை செய்யுங்கள். அம்மன் மந்திரம் போற்றி சொல்லுங்கள். ஓம் சக்தி சொல்லுங்கள். ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று, சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டி மகாலட்சுமியை பூஜித்து வரலட்சுமி நோன்பு மேற்கொள்வார்கள். தேவியின் பாதங்களில் திருமாங்கல்ய சரடு வைத்துப் பூஜை செய்து வணங்கினால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

திருமணமாகாத பெண்களும் நல்ல வரன் வேண்டி அம்மனுக்கு விரதம் இருப்பார்கள். ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அத்துடன் கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான வழி உண்டாகும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

The post வேண்டியதை அள்ளித்தரும் ஆடி வெள்ளியின் சிறப்புகள் appeared first on Dinakaran.

Tags : Audi ,Tamil ,Lord ,Adi ,
× RELATED எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!